Wednesday, April 29, 2009

ஜனநாயக தேர்தல்

ஒரு இந்தியத்தாய்(தமிழரல்ல) தன் மகளுடன் பஸ்ஸில எங்கோ பயணித்துக்கொண்டிருக்கிறாள். அவளின் மடியில் அவள் மகள் நல்லா உறங்கிக்கொண்டிருக்க அந்த தாய் ஏதோ ஒரு ஹிந்தியில் எழுதிய துண்டுபிரசுரமாதிரியொன்றை வைத்து வாசித்துக்கொண்டே வந்தாள். அந்த பஸ்ஸில நானும் இவர்களுக்கு பக்கத்தில நின்றுகொண்டு பயணித்துகொண்டு இத்தாயை அவதானிச்சுக்கொண்டே வந்தேன். அவள் அந்த துண்டை வாசித்து முடிப்பதும் மற்றக்கையில் வைத்திருந்த முத்துமாலை மாதிரி ஒன்றிலுள்ள முத்தை தொடுவதும் பின்னர் மீண்டும் அதை வாசித்து முடித்து அந்த மாலையிலுள்ள அடுத்த முத்தை தொடுவதுமாக அவளின் செயற்பாடு இருந்திச்சு. இவற்றை பார்த்தவுடன் என் மனதுக்குள் பலவாறான மனவோட்டம் பல சிந்தனைகள். கேட்டுகொண்டிருக்கிற பாட்டின் தன்மையும் சேர்ந்தோ என்னவோ தெரியலை (காதுக்க பாட்டுப்பெட்டியையும் கொலுவிக்கொண்டே பயணிப்பது வழக்கம்) எதோ ஒரு இனம்புரியா உணர்வால் நெஞ்சு கனக்க அது கண்ணீராக கண்கள் கலங்கியது. நச்சுக்குண்டேவி கொல்லப்பட்ட ஒரு போராளியின் உடல் தோற்றத்தை பார்த்த அப்போராளியின் தாயுனுடைய வேதனை கதறல் மனக்கண்முன் வந்து போனது. இதே இந்திய தாயுனுடைய அரசுதானே ஈவிரக்கமின்றி விலங்கினங்கள் மீதே வீசத்தடைசெய்யப்பட்ட குண்டை ஏவி கொல்லுகிறது. ஜனநாயக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசென்றால் இந்த தாயின் பிரதிபலிப்பாகத்தானே அந்த அரசுமிருக்கவேண்டுமென மனம் எண்ணத்தோன்றினாலும் சீ அப்பிடி இருக்க வாய்ப்பே இல்லை என்றே அந்த தாயை பார்க்கும்போது தோன்றுகிறது. ஏனென்றால் அந்த தாய் முத்தை எண்ணி எண்ணி எதோ ராம நாமமெ உச்சரித்துகொண்டு பயணிக்கிறாள் என்று நினைக்கிறன் அப்படி ஒரு பயபக்தியுள்ள (மூடநம்பிக்கையாக இருந்தாலும்) ஒரு பாசமுள்ள தாயாகத்தான் எனக்கு தெரிகிறாள். அப்படிப்பட்டவளை எப்படி இந்திய அரசுடன் ஒப்பிடுவது? அப்படியென்றால் ஜனநாயகமென்பது போலியா என்றால் இலங்கை, இந்தியாவை பொறுத்தவரையில் அது பொருத்தமில்லாத ஒன்றுதான்.

ஜனநாயகமென்பது ஜனநாயக அரசென்பது உண்மையில் அந்த அந்த நாட்டுமக்களில் பெரும்பான்மையானோரின் உணர்வுகளின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கவேண்டும். இது ஓரளவுக்கு மேற்கத்திய நாடுகளில் வெற்றிகரமாகவே இருக்கிறது. ஏனென்றால் அந்த நாடுகளினுடைய மக்களில் பெரும்பாலனோரின் பொதுவறிவு, அரசியல் அறிவு, யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் தன்மைகளை பார்ப்போமென்றால் மிகவும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. இத்திறன்கள் தமது உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கும் தமது சமூகத்தை வெற்றி நோக்கி வழிப்படுத்தும் தலைவர்கள் யார் என்று சுயமாக சிந்தித்து முடிவெடுக்க உதவுகின்றது. அதே நேரம் இவர்கள் நாட்டின் பொருளாதார நிலை ஒருவகையில் காரணமாகிறது. ஏனெனில் உயர் பொருளாதார நிலை காரணமாக இவர்களுக்கு உடனடித்தேவையென்று எதுவுமே இருக்கப்போவதில்லை (பெரும்பாலனோர் அடிப்படைதேவைகளை நிறைவுசெய்தவர்களாகவே இருக்கிறார்கள்). ஆகவே இவர்கள் சிந்திப்பதெல்லாம் தங்கள் எதிர்கால நன்மைகளையே. அதனால இவர்களால் நிதானமாக சிந்தித்து தங்களின் எதிர்காலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடியதாகவுள்ளது. இவர்களின் பொருளாதாரனிலை மிகவுயர்ந்ததாகவிருப்பதால், எந்தவொரு ஆசைவார்த்தைக்கும் எடுபட்டு தங்களின் உடனடித்தேவையை பூர்த்திசெய்யவேண்டிய அவசியம் கிடையாது. அதனாலதான் இங்கு ஜனநாயக ஆட்சியென்பது மிகவும் பொருத்தமாகவும் வெற்றிகரமாகவுமிருக்கிறது.

ஆனால் எங்களுடைய நாடுகளை பொறுத்தவரை இது வெற்றிகரமாக இல்லை என்றே கூறவேண்டும். இது ஒரு சில அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. எங்கள் நாட்டுமக்களின் அறிவுத்திறனை பார்த்தால் பெரும்பாலனோருக்கு குறைவாகவே உள்ளது அதிலும் அரசியல் அறிவு என்னும்போது பூஜ்ஜியமாகத்தான் உள்ளது. இப்படியிருக்க இவர்கள் எப்படி சுயமா சிந்திப்பார்கள் தமக்கு நன்மை செய்யக்கூடிய தமது உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். இவர்களிலும் பெரும்பாலனோர் இன்னமும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியோராய்தான் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு மேற்சொன்ன அம்மா ராம நாமத்தை 108 தரமோ 1008 தரமோ திரும்ப திரும்ப வாசிக்கின்றனேரம் எதோவொரு உலகநடப்பு பத்திரிகையை வாசித்துக்கொண்டுவந்திருந்தால் தன் அரசியலறிவை கூட்டியிருக்கலாம் ( தன்னுடைய நாட்டரசு என்ன செய்கிறது என்றாவது அறியலாம். நிச்சயமாக அந்த அம்மாவுக்கு இலங்கையில் போர் நடக்கிறது அதை தான் தேர்ந்தெடுத்த அரசுதான் உதவிசெய்து கொண்டு நடத்துகிறது அப்பாவிமக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை).
மேலும், எமது நாட்டுமக்களில் பெரும்பாலனோர் யாதார்த்தத்தை புர்ந்துகொள்ளதவர்களாகவே உள்ளனர். இதனால் எமது நாட்டின் பொருளாதார நிலமை என்ன….எடுத்தோம் கவுத்தோமென சும்மா உச்சத்துக்கு போய்விடமுடியாது என்பவற்றை புரிந்துகொள்ளாதவராகவே உள்ளனர் இதனால்தான் சும்மா ஒருதன் வந்து பசப்புவார்த்தைகளை அள்ளித்தந்து தான் அப்பிடிச்செய்வேன் இப்படிச்செய்வேனென்றால் உடனே அவனுக்கு தமது வாக்கைப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள். அதேநேரம் எம்மில் பெரும்பாலானோர் இன்னமும் அடிப்படைத்தேவைகளைக்கூட நிறைவுசெய்யவில்லை இவர்களுக்கு உடனடித்தேவைகள் பல, அப்படியானவர்கள் பணத்திற்கும் உடனடிசலுகைகளுக்கு எடுபட்டு போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலமையில் நாம் எப்படி எமது நாடுகளில் மக்களினை பிரதிபலிக்கும் அரசுதானிருக்குமென எதிர்பார்க்க முடியும்?

என்னைப்பொறுத்தவரையில் இப்படிப்பட்ட தேசங்களுக்கு ஒரு கட்சி ஆட்சிமுறையே தற்போதைக்கு மிகவும் சிறப்பாக அமையும். ஆனால் ஜனநாயகமென்பது மிகவும் சிறந்ததொன்று எனவே இப்படியான ஒரு கட்சி ஆட்சிமுறையிலிருந்துகொண்டு ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதே சாலச்சிறந்ததாக இருக்கமுடியும். இவ்வாட்சி முறையிலிருந்துகொண்டு ஜனநாயகத்திற்கு தேவையான அடித்தளங்களை இடவேண்டும் அதாவது மக்களிடமிருந்து மூடநம்பிக்கைகளை களைந்து அவர்களுக்கு அரசியல் பாடம் புகட்டி மிகத்தெளிவுள்ளவர்கள் ஆக்கி அதன் பின் ஜனநாயக ஆட்சிமுறையை கொண்டுவர்வேண்டும்.

Saturday, April 18, 2009

வியாழன் மத்தியான சாப்பாடு

இப்பவெல்லாம் எனக்கு எதோ வியாழக்கிழமை வந்தாலே ஒரு ஒரு கரி நாள்மாதிரியப்பா. எல்லாம் இந்த மத்தியான சாப்பாடுதான். இந்த மதிய உணவுதான் உலகத்திலயே மிக மிக கேவலமாக தாயாரிக்கப்பட்ட உணவா இருக்குமோ என்ற சந்தேகம் கூட எனக்கு இதை சாப்பிடும்போது வந்து போகும். பத்து நாள் சாப்பிடாமல் கிடந்தவனிட்டை கொண்டே குடுத்தால் கூட கெட்டவார்த்தையால திட்டிட்டு தூக்கியெறிவான் என்றுதான் நினைக்கிறன். அப்பிடி கேவலமாயிருக்கும் அது மோந்துபார்க்கிறதுக்கு முன்னமேயென்றால் மோந்து பார்த்து சாப்பிட்டால் எப்படியிருக்கும் நான் அந்த சாதனையை செய்திருக்கிறன் அச்சாதனையை இறுதியில் சொல்லுறன் (எப்படித்தான் இப்படியெல்லாம் செய்யிறாங்களோ தெரியாது இதுக்கெல்லாம் தனிப்பிறப்பெடுக்கவேணும்). இதுக்கு முந்தி எங்கட flashback ஐ பார்த்திட்டு இப்ப நடக்கிறதை பார்த்தால் சிரிப்புத்தான் வரும்

முந்தியெல்லாம் பாருங்க நாங்கள் எல்லாம் பெரிய highly people. ஏனெண்டு கேட்கிறிங்களா? உப்பு எப்பன் குறைஞ்சு கூடினாலே எத்தனை பெரிய கலவரம் யுத்தம் என்றெல்லாம் அம்மாவோடு செய்வம். எத்தினை பேச்சு அம்மாவுக்கு இவ்வளவு காலம் சமைக்கிறிங்கள் இன்னும் உப்பு சரியா போடத்தெரியாது (எதோ இவரைவிட்டால் எல்லாம் perfect ஆ செய்வரில்லே) என்று அன்று ஒரு நாள் குறைஞ்சதுக்கு எதோ ஒவ்வொரு நாளும் செய்யிறமாதிரி பேச்சு, அந்த சாப்பாட்டை சாப்பிடமாட்டன் என்று உண்ணவிரதம் வேற இருப்பம் அம்மா இதெல்லாத்தையும் பார்த்துட்டு சரி நான் திருப்பி செய்துதாரன் என்று எழும்பிபோகத்தான் எங்களுக்கு திருப்தி வந்து எதோ எங்கட போராட்டத்தில வெற்றிபெற்றாச்சு என்ற பெருமையில கொலர தூக்கிவிடாத குறையா போய் அம்மாட்டை சரி நான் இதையே சாப்பிடிறன் என்று பெரிய தியாகம் செய்து சாப்பிடுவது போல சாப்பிடுவம் (ஆனால் இப்ப நிலமையை பாருங்க). இப்படி பந்தா பண்ணி சாப்பிட்டனாங்கள் இப்ப இப்பிடி அழுதழுது சாப்பிடவேண்டிக்கிடக்கு. இனி எப்பதான் அந்தகாலம் வருமோ……..வயது திரும்பி மற்றவழத்திற்கு ஓடாதா என்றுகூட சிலவேளைகளில் யோசிப்பதுண்டு.

சரி சாப்பாட்டை சாப்பிட்டகதைக்கு வருவம். எனக்கு முதலிலேயே ஒரு idea சாப்பாட்டை திறந்து பார்க்காமல் வெளில எங்கேயாவது போய் சாப்பிடுவமென்று (தெரியும்தானே 2 வருஷமா வியாழனில் எப்பிடி சாப்பாடென்று). ஆனால் அதுக்கும்போய் எங்கட office ல இருந்த manager ஒருதன் ஆப்பு வைச்சுவிட்டான். என்னென்றால் நானும் வெளில போய் சாப்பிட idea போட்டு, எங்கட office ல இருக்கிறவே சாப்பிட முதலில போகட்டுமென்று பார்த்துக்கொண்டிருந்தேன் ஏனென்றால் அவேக்கு முதல் வெளிக்கிட்டனென்றால் தங்களோடுவந்து சாப்பிடுமாறு வற்புறுத்திக்கொண்டிருப்பார்கள். அவங்களோடு போய் சாப்பிடிறதில என்ன பிரச்சனையென்றால் அந்த chinese சாப்பாடுதான் (இதைப்பற்றி பெரிய சரிதம் எழுதலாம்). அதை சாப்பிடுவதை காட்டிலும் பட்டினிகிடக்கலாம். அந்த manager என்ன செய்தானென்றால் போகும்போது என்னையும் சாப்பிட வா என்று ஒரே அடம்பிடிக்க வெளிக்கிட்டுட்டான் நானும் அவனிடமிருந்து தப்புவதற்காக நான் கொண்டந்த சாப்பாட்டை திறந்து சாப்பிடத்தொடங்கிவிட்டேன். இப்பதான் என்ர கஸ்டகாலம் ஆரம்பமாச்சு. என்னவா இருந்தலென்ன மூக்கப்பிடிச்சுக்கொண்டு மருந்துகுடிக்கிற மாதிரி சாப்பிடிறதுதான் என்று சபதமெடுத்து சாப்பிடதொடங்கினேன். சரியென்று ஒரு பிடியை வாய்க்குள் போட்டு மெல்லத்தொடங்கினால், வாய்க்குள் ஒரே கரிக்கட்டிமாதிரி கிடந்துச்சு என்னடா இது என் சபதத்துக்கு ஆப்புவைக்குது என்று கறியை குனிஞ்சுபார்த்தால் அதில ஒரு கறி கரியாகிக்கிடந்திச்சு அது என்ன கறியென்று ஆராய்ந்துபார்த்தில் அது கோபா வறையென்று அந்த சமையல்கார சீமான் செய்திருக்கிறார் என்று விளங்கிச்சு. அப்பதான் காலையில வீடெல்லாம் ஒரே புகை அதாலதான் தான் மூச்சுமுட்டி விழித்துகொண்டதா hall க்க படுக்கிற நண்பனொருவன் சொன்னது ஞாபகத்துகு வந்தது. ஓ……அந்த விளைவுதான் இந்த கரிக்கட்டி கறி என்று விளங்கிச்சு. அப்பதான் யோசிச்சன் அவங்களோடபோயாவது ஏதாவது சீனா சாப்பாடாவது சாப்பிட்டிருக்கலாமென்று என்ன செய்ய எல்லாம் விதியென்று அடுத்த வாய் சோற்றை சாப்பிடத்தொடங்கினேன் ம்ம்ம் முடியல. இதுக்குமேல சாப்பிட்டனென்றால் உலகத்தில ஆக கேவலமான சாப்பாட்டை 2 வாய்க்கு மேல் சாப்பிட்ட கின்னஸ் சாதனை வந்திடுமென்ற பயத்தில சாப்பிடாமல் அப்பிடியே கொண்டுபோய் கொட்டிட்டுவந்து கம் என்று வந்திருந்து இதை எழுதுகிறேன் சாப்பிடபோனாக்கள் திரும்பி office வரும்வரைக்கும். இதுதான் என் சாப்பாட்டுக்கதை………BYE.


Thursday, April 16, 2009

சகோதரியின் கேள்விக்கு எனது பதில்……….

இது உண்மையில் புதுவருடத்தன்று எனது சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால். நான் அவளுக்கு எழுதிய பதில்……...

நீ கேட்ட கேள்விக்கு எனக்கு கனக்க எதோ பதில் அளிக்க வேணும்போல பல எண்ணம் மனதுக்குள் வந்து நிற்கிறது ஆனால் எனக்கு அவ்வளவையும் தொகுக்க முடியல……….இருந்தும் எனது மன எண்ணங்களை முடிந்தளவு எழுத்தாக தர முயற்சி செய்கிறேன்.

நம்மளுடைய சமூகமிருக்கே அது பல சம்பிரதாயங்களை சரியான அர்த்தப்படுத்தி அதை கடைப்பிடிப்பது கிடையாது. ஏனோ இது சம்பிரதாயம் கடவுளுக்கு செய்வது கட்டாயம் செய்யவேண்டும் அல்லது கடைப்பிடிக்கவேண்டுமென்றே செய்வதுண்டு. நாங்கள் எமது சொந்தகாரர் ஒருதன் (அதுவும் ஒருவேளை எத்தனையோ கடல்மைல் தொலைவில் கூட இருக்கலாம்) செத்துவிட்டான் என்றால் அவன் செத்து 31 நாள் எமக்கு துடக்கு என்று சொல்லி கோயில் பக்கம் போகக்கூடாதென்று வலு கட்டுப்பாட்டோடு இருப்போம் அவன் செத்த ஆண்டில் வரும் தைப்பொங்கல் புதுவருடப்பிறப்பு மற்றும் தீபாவளி போன்றவற்றை புறக்கணிப்பதுபோல வெளியில் பானை வைத்து பொங்கமாட்டோம், புத்தாடை அணிந்து கலகலப்பாக திரியமாட்டோம். இதெல்லாம் எதுக்கப்பா என்று கேட்டால் அது சம்பிரதாயம் என்று சொல்வார்கள் அதிலும் கொஞ்சம் பகுத்தறிவுடன் சிலர் நாங்கள் இப்படி திரிஞ்சால் அந்த செத்தவனின் பிள்ளை குட்டியல் என்ன நினைக்கும் என்பார்கள்.

ஆனால் நம்முன்னோர்கள் மிகச்சரியாக இவற்றை வகுத்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறன். ஏனெனில் எமது சமூகத்தை நல்ல மனிதமுள்ள மக்களாக வழிப்படுத்தவேண்டுமென்ற நோக்கோடுதான் இதை வகுத்திருக்கிறார்கள். மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுக்கவேண்டும் அவர்களை வேதனைப்படுத்தக்கூடிய விதத்தில் நாம் நடந்துகொள்ளக்கூடாது என நல்ல விதத்தில் தங்கள் சமூகத்தை வழிப்படுத்தக்கூடியவாறு வகுத்திருகிறார்கள்.

நாங்கள் என்ன செய்கிறோம். சம்பிரதாயத்திற்காக 31 நாள் துடக்கு என்று கணக்காக கடைப்பிடித்துவிட்டு அடுத்த நாள் எமது களியாட்டங்களை தொடங்குகிறோம். அந்த செத்தவனுடைய நெருங்கியோரின் துக்கம் சிலவேளை 35 நாளிற்கு பிறகு குறையலாம் அல்லது அதற்கு முன்னமே 25 நாளிலும் குறையலாம். ஆனால் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை கணக்கா துடக்க முடிப்போம். இதுதான் எமது சமூகத்தின் இன்றைய வழமை. இதனால்தான் என்னவோ இதன் உண்மையான அர்த்தத்தை சிந்திக்காமலே பழகிவிட்டோம்.

இதே பழக்கம்தான் இங்கும் நடக்கிறது. அதுதான் வன்னியில் இன்று எம் உறவுகள் பெரும் துன்பத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை துன்பங்களையும் அந்த மக்கள் அனுபவிக்கும்போது நாம் புதுவருடத்தை புத்தாடை அணிந்து கலகலப்பாக கொண்டாடத்தான் வேணுமா என்று கேட்டால் எமது சமூகத்தில் ஒரு சாரார் சொல்கிறார்கள் அது வன்னியில் நடக்கிறது இங்கு நாங்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினால் யாருக்குதான் தெரியப்போகுதென்றும் மேலும் நாம் எமது வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்கவேண்டும் இழந்த காலம் திரும்பிவராது என்ற விளக்கம் வேற தருகிறார்கள். ஆனால் இதே சாரார் தான் எத்தனையோ கடல்மைல் தொலைவில் இயற்கையாக வயதாகி மரணித்த தனது சொந்தகாரன் ஒருவனுக்காக 31 நாள் சம்பிரதாயமாக துடக்கு கடைப்பிடிகிறார்கள். இப்படி இவர்கள் கடைப்பிடிக்கும்போது ஏன் இவர்கள் தங்கள் சந்தோஷமான காலம் கடந்துபோவதாக கருதுவதில்லை. ஆனால் எமக்காக தங்கள் சந்தோஷங்கள் அனைத்தையும் இழந்து போராடி மடிகின்ற அந்த போராளிகளுக்காக இவர்களால் புத்தாடை அணிவதை தவிர்த்து ஒரு சிறிய சந்தோஷத்தை இழக்க முடியாமல் இருக்கிறது. அந்த போராளிகளின் பெற்றோரின் துக்கத்தில் பங்கெடுக்க முடியாமல் உள்ளது. அல்லது அங்கிருக்கும் விடுதலைக்காக பாடுபட்ட அம்மக்களின் துக்கத்தை பகிரமுடியாமலுள்ளது. இதிலென்ன நியாயம் இருக்கிறது?

இப்படியெல்லாம் கேட்க போக இச்சாரார் வழமையான கேள்வியே கேட்டு தாங்கள் செய்வதை நியாயப்படுத்திற மாதிரி கதைப்பார்கள். அதுதான் நாங்கள் அங்கே போய் அந்த மக்களுடன் இருக்கலாம் அல்லது போராடி இருக்கலாம் அதைவிட்டுட்டு இஞ்சவந்து தமக்கு புத்தி சொல்கிறோம் என்பார்கள். தாங்கள் ஒரே முடிவில்தான் இருக்கிறோம் அங்குபோய் போராடவில்லை தமக்கு உந்த அரசியல் எல்லாம் பிடிக்காது தாம் எப்பவும் நடுனிலையானவர்கள் யாருக்கும் ஆதரவில்லை தாங்கள் யாருக்கும் தொந்தரவில்லாமல் எமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசெல்கிறோம் என்று பலவாறு நியாயம் கற்பிப்பார்கள். ஆனால் இச்சாரார் யாருக்கும் தொந்தரவில்லாமல் தமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசெல்ல காரணமானவர்களை வசதியாக மறந்துவிட்டிருப்பார்கள். இவர்களைப்போலத்தான் 83ம் ஆண்டு பலர் யாருக்கும் தொந்தரவில்லாமல் தமது வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டுசென்றிருப்பார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது.

இப்புத்தாண்டு எம் தமிழினத்திற்கு ஒரு விடிவு காலத்தை வெற்றியை தேடித்தரும் ஆண்டாக அமையவேண்டுமென வேண்டுகிறேன்.

Monday, April 13, 2009

எமக்கு தேவையில்லை தற்காலிக போர்நிறுத்தம்

இன்றும் வழமையைப்போலவே பிரார்தனையுடன் எழும்பினேன். போராளிகளிற்கு வெற்றிவர வேண்டும் நல்ல செய்தி ஏதாவது வரவேண்டும் எதுவும் துக்கம் தரும் செய்திவந்திடக்கூடாது என்ற பிரார்தனை. பெரும்பாலான தமிழரின் வேண்டுதல் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் இறைவன் தான் இன்னமும் தூங்கிக்கொண்டே இருக்கிறான். என்று விழிப்பான் இதுதான் எமது ஏக்கம். இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை. சற்று தாமதித்தாலும் தர்மம் வெல்லும் உண்மை என்றும் தோற்றதில்லை.

இதற்கிடையே மகிந்தவின் 48 மணிநேர போர்நிறுத்த அறிவிப்பு பெரும் விசனத்தை கொண்டுவருகிறது. போர்நிறுத்தத்தால் இல்லை அது அறிவிப்பு செய்ததற்கு கூறப்பட்ட காரணம் அதற்கு பின்னால் உள்ள சதித்திட்டம் இவற்றால்தான் வெறுப்பாகவே இருக்கு. போர்நிறுத்தமென்பது ஒரு நல்ல விஷயமே 1 மணிநேர போர்நிறுத்தம் கூட அந்த மக்களுக்கு ஒரு ஆறுதலே ஏனெனில் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக நடக்கும் போரில் 1 நிமிடம்கூட ஓய்வு கொடுக்கவில்லை. அப்படிப்பார்க்கையில் இது ஒரு ஆறுதலே. ஆனால் இந்த 48 மணிநேரம் செய்து என்ன பிரயோசனமென்றால் ஒன்றுமே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இந்த 48 மணிநேரத்தில் அம்மக்கள் என்ன செய்யமுடியும். தம்முறவுகள் யார் யார் மடிந்தார்கள் யார் உயிருடன் உள்ளார்கள் என்று கண்க்கு பார்க்கவே முடியும். தமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கத்தான் முடியுமா அப்பிடி வாங்குவதற்கு பொருட்கள்தான் உள்ளனவா? அல்லது வாங்கினால்தான் அதை வைப்பதற்கு வீடிருக்கிறதா? அப்பிடி வாங்குவதற்கு பணம்தான் உள்ளதா? சரி உயிரையாவது காப்பதற்கு பாதுகாப்பான இடமென்று எங்கு செல்வது அரசால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திலிருந்து. அல்லது அரசின் நலன்புரிமுகாமென அழைக்கப்படும் வதைமுகாமுக்கு செல்வதா? அப்பிடி அங்குதான் போவதென்றால் என்றோ அந்த மக்கள் போயிருப்பார்களே.

இப்படி அந்த மக்கள் அல்லற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் அந்த கொடும் பயங்கரவாதி மகிந்த சொல்லுகிறான் அந்த மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக 48 மணிநேர போர்நிறுத்தம் செய்கிறாரம். எவ்வளவு நெஞ்சழுத்தம் பாருங்கள் அவனுக்கு. இதிலிருந்தே தெரிகிறது அவனுக்குள் எவ்வளவு வக்கிரமும் இனவாதமும் கொட்டிக்கிடக்கென்று.

இந்த போர்நிறுத்தத்திற்கு பின்னால் இருக்கும் சதித்திட்டங்களை ஊகிக்கும்போது பயங்கரமாக உள்ளது. ஒருவேளை இந்த போர்நிறுத்த நாடகம் முடிந்த பிறகு வெளியேறாத மக்கள் எல்லோரும் புலிகளாக மாறிவிட்டார்களென்று அறிவித்துவிட்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து அழிக்க நினைப்பார்களோ என எண்ணும்போது என்னவோ செய்கிறது (கடவுளே அப்படியேதேனும் நடந்துவிடக்கூடாது) அதற்குள் இந்த உலகம் கண்ணைத்திறக்கவேண்டும். அது புலம்பெயர்ந்த மக்களின் கைகளிலேயே உள்ளது அதற்காக நாம் எல்லோரும் வீச்சோடு படுவேகமாக எம்முள் உள்ள வேற்றுமைகளை மறந்து இப்போ உள்ளதைவிட கடுமையாக போராடவேண்டும். மனம் தளராது சோர்வடைய விடாமல் எம்போராட்டத்தை தொடரவேண்டும். இந்த போர்நிறுத்தத்தை காரணம்காட்டியே பல நாடுகள் நம் போராட்டத்தை தட்டிக்கழிக்கக்கூடும் நசுக்கக்கூட முற்படும் எதற்கும் அசைந்து கொடுக்காது வலிமையாக நின்று அவர்களின் மனச்சாட்சியை தொடவேண்டும். இதைவிட்டால் எமக்கு வேறு சந்தர்ப்பமில்லை எமது நிம்மதியான வாழ்விற்கு ஆகவே எல்லோரும் ஒற்றுமையாக உரத்து குரல் கொடுப்போம்

"எமக்கு தேவையில்லை தற்காலிக போர்நிறுத்தம் எமக்கு வேண்டும் நிரந்தர போர்நிறுத்தம்"
"எமக்கு தேவை நிரந்தர தீர்வு நிரந்தர நிம்மதி அது தமிழீழமே"
"எமது ஏக பிரநிதிகள் விடுதலைப்புலிகளே எமது தலைவர் பிரபாகரனே"

Thursday, April 9, 2009

இந்திய அரசே உனக்கு நாம் என்ன செய்தோம்?

நச்சுக்குண்டேவி எம்மினத்தை கொல்லுமளவுக்கு உனக்கு எம்மினம் என்ன கொடுமை செய்துவிட்டது? இப்படிக்கேட்டால் உடனே சொல்லுகிறாய் உனது பிரதமரைக்கொன்ற இனமென்று. உனக்கு கூட சரியாக உறுதியாக தெரியாதே அதை செய்தது யாரென்று……அப்படியிருக்க நீ ஒரு இனத்தை அழிக்க துணிந்துவிட்டாயே. காலப்போக்கில அதை செய்தது வேறொருவரென தெரியவந்தால் எப்படி அந்நிலையில் நியாயம் வழங்கப்போறாய். சரி நீ சொல்வது போல் அது யாரோவொரு ஈழத்தமிழனால் செய்யப்பட்டால் அதற்கு முழு இனத்தையும் பழிவாங்கிறாயே இதுவென்ன நியாயம். அதுவும் இலங்கை அரசால் ஏற்கனவே கொல்ல முயற்சிக்கப்பட்ட ஒருவரே பின்னர் கொல்லப்பட்டிருக்கிறார். அவ்விலங்கை அரசுடன் மட்டும் கூடிக்குலாவி தமிழினத்தை நச்சுக்குண்டேவி கொல்கிறாயே அவ்வளவு கேவலமானவனா தமிழன்.

உனக்கு ஒன்றுதெரியுமா? ஒவ்வொரு சிங்களவன் மனதில் நீ இருக்கிறாயா என்று ஆராய்ந்து பார்த்ததுண்டா? நீ எங்க அதுகளை ஆராய போகிறாய் உன் சுயநலத்திற்காக ஒட்டுமொத்த இந்திய மக்களை அடகுவைத்து நிற்கும் அதிகாரவர்க்கமான நீயும் ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் அடகுவைத்து நிற்கும் அதிகாரவர்க்கமான அவனும்தானே கதைத்து முடிவெடுக்கிறாய். பிறகு எப்படி கீழ் மட்ட மக்களின் மனம் உனக்கு புரியும். ஆனால் எங்களுக்கு தெரியும் ஏனெனறால் நாங்க அவன்கூட இருந்துருக்கிறோம். அடிப்படையில் நீ அவன் மனதில் இல்லை எப்படியென்று கேட்கிறியா? இதற்கு ஒரு சின்ன உதாரணமே போதும்.

ஒரு கிரிக்கட் போட்டி நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ. இதில தமிழர்கள் சிங்களவர்கூட ஒன்றாய் இருந்து பார்க்கிறார்கள். அதில இந்தியா வெற்றிகளை குவிக்கும்போது தமிழருக்கு எதோவொரு உணர்வு அதற்காக கையை தட்டுகிறான். ஆனால் அந்த சிங்களவன் என்ன செய்கிறான் கை தட்டியதற்காக அவனை தாக்குகிறான். இது உண்மையில் நடக்கின்ற ஒன்று. நான் அனுபவதிலும் கண்டதுண்டு. ஆனால் இன்று என்ன அதே சிங்களவன் உன்னுடைய உதவியுடன் உனக்காக தாக்குப்பட்ட தமிழனை அழிக்கிறான்.

இது ஒரு சின்ன உதாரணம்தான், வாழ்க்கையில் நடக்கும் பல பல சம்பவங்களை பார்க்கும்போது ஒரு தமிழனின் அடிப்படை மனதும் ஒரு சிங்களவனின் அடிப்படை மனதும் தெரியும். ஏன் என்று கேட்டால் தெரியாது. இந்தியா தமிழனுக்காக என்ன செய்துவிட்டான் அதுவும் ஒன்றுமில்லை ஆனாலு தமிழன் உன்னை நேசிக்கிறான் உன்னை பின்பற்றுகிறான் ஆனால் நீயோ அவனை நச்சுக்குண்டேவிக் கொல்கிறாய்.

ஏன் நான் எனது மனநிலையையே சொல்லுகிறேன். இதுதான் பெரும்பாலான தமிழரின் மனநிலையாகவுமிருக்கும். கார்கில் யுத்தம் வந்தபோது பாகிஸ்தான் மீது ஆத்திரம் இந்தியா வெல்லவேண்டும் என்ற பிரார்த்தனை. குஜராத் பூகம்பம் வந்த போது ஏதோ எங்கள் நாட்டு மக்களுக்கு வந்தமாதிரி உணர்வு துக்கம். தூரதர்ஷன் நிகழ்ச்சி பார்க்கும்போது ஏதோ எம் தேசிய தொலைக்காட்சி பார்ப்பது போலவே ஒரு உணர்வு. இந்திய தேசிய நாளில் ஒரு உத்வேகம் தேசிய கீதத்தைக்கேட்கும்போது ஒரு இனம்புரியா உணர்வு கொடியேற்றும்போது ஒரு மரியாதை இத்தனைக்கும் இலங்கையின் தேசிய நாளையோ, கீதத்தையோ அல்லது கொடியையோ ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. இத்தனை உணர்வும் எதனால் வந்ததென்று எனக்கே தெரியவில்லை. நீ எமக்காக என்ன செய்தாய்? இப்படி உன் மீது பாசம் வைத்த தமிழரை நச்சுக்குண்டேவி அழிக்கிறாய்.

ஏன் இந்த வெறி? உன் வல்லாதிக்க ஆசைக்கு வெறிக்கு தமிழன்தான் கிடைத்தானா உனக்கு? தமிழனை கொன்றால் கேட்க எவனிமில்லை என்ற துணிச்சலில் அவனுடை மன உணர்வை பார்க்க மறந்திட்டாய். உன் ஆதிக்க வெறி உன் கண்ணை மறைத்துவிட்டது. இந்திய வல்லாதிக்கமே ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் அப்பவிருந்த உணர்வு இப்ப எம்மனதில் இல்லை உன்னை ஒரு துரோகியாகவே எண்ணத்தோன்றுகிறது. இதற்காக நீ நிச்சயம் வருந்துவாய் ஒருநாள். இந்த உலகத்தில் உனக்கொரு உற்ற நண்பனின்றி வருந்துவாய்.

Tuesday, April 7, 2009

பொறுக்க முடியவில்லை……………….

இன்று எதையோ இழந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு………..ஒரே சோகமான நிலை……….. எதற்கென்றால் எல்லாமே நேற்றைய ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தியின் விளைவே. அதுதான் நச்சுக்குண்டு ஏவி 250க்கு மேற்பட்ட போராளிகள் வீரச்சாவாம்……….ஏன் நியாயம் செத்துவிட்டதா இந்த உலகத்தில்…..அல்லது இதுவரைக்கும் அப்படியென்று ஒன்று இருந்ததே இல்லையா……….உண்மை வெல்லும் சத்தியம் ஜெயிக்கும் தர்மம்தான் இறுதியில் வெல்லுமென்பதெல்லாம் சும்மா பசப்பு வார்த்தைகளா? …………ஆனால் நாங்கள் இன்று இறுதி நிலையிலையே நிற்கிறோம் இன்னமும் தர்மம் வெல்லுமென்ற நம்பிக்கையுடன்……………..

இதற்கிடையில் என் நண்பர்களிருவரின் சம்பாஷனைகளால் மனம் இன்னும் வேதனைப்படுகிறது. என்ன அதுவென்றால்………….

நேற்று அந்த செய்திவந்ததிலிருந்து (உண்மையில் இச்செய்தி முந்தநாளே வந்துவிட்டது நான் நம்பவில்லை) தமிழனென்று மானமுள்ளவன் எவனுமே சோகநிலையில்தான் இருப்பான். விடிய எழும்பிய பின்னும் அந்த சோகம் மாறவில்லை, அந்நிலையில் இவர்கள் இருவரும் யாழ் செல்வதுபற்றி கதைத்து விட்டு எப்பொழுது அங்கு யாழ்தேவி(Train) விடுவார்கள் என்று அலசி ஆராய்கிறார்கள் எந்தவிதமான கூச்சமுமின்றி சுறனையற்ற மனிதர்கள் என்ன பிறப்புகளோ தெரியவில்லை. இதுக்குள்ள வேற என்னையும் இணைக்க எப்ப ஓடுமென்று கேள்வி நான் ஒன்றுமே பேசவில்லை. மவுனமாகவே இருந்துவிட்டேன் ஏனென்றால் இவர்களோடு கதைக்கபோனால் எனக்குதான் வேதனைகூடுமென்று முதல் நடந்த சம்பவமொன்று ஞாபமூட்டியது.

இதையே இவர்கள் வேறயொருநேரத்தில் கதைத்திருந்தால் நான் பெரிதாக எடுத்திருக்கமாட்டேன் இவையள் இப்பிடித்தான் என்று பேசமால் போய்கிட்டிருந்திருப்பேன் ஆனால் அவேக்கு இதுதானா நேரம் கிடைத்தது ஆராய்ச்சிக்கு………..பொறுக்க முடியாமல் போய்விட்டது. இதுக்குள்ள ஒருவருக்கு நேற்று நடந்த சம்பவம் தெரிந்திருக்குமோ என்பதைக்கூட உறுதியா சொல்லமுடியாது. மற்றவருக்கு எல்லா விஷயும் தெரியும். ஏன் இவர்களுக்கு உணர்வென்பதே இல்லையா? இவர்களேன் இப்படி இருக்கிறார்கள் என பலதடவை என்னை நானே கேட்பதுண்டு. இதைப்பற்றி பார்க்க முன்னாடி முதல் நடந்த சம்பவத்தையும் பார்த்துவிட்டு வருவோம்

நாங்கள் வழமையாக வேலைக்கு புறப்பட முன் காலைச்சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டு TV news பார்த்து அதைப்பற்றி விமர்சித்துவிட்டுதான் செல்வது. இப்படித்தான் ஒருநாள் news பார்த்துகொண்டிருக்க காங்கிரஸ் கட்சி இலங்கைக்கு மருந்துப்பொருட்கள் அனுப்பியதாக ஒரு செய்தி. நானும் அந்த செய்தியைபார்த்தவுடன் எனது விமர்சனம் இதெங்க மக்களுக்கு எல்லாம் இராணுவத்துக்குத்தான் என்றேன். உடனே எனது அதே நண்பர்களில் விபரமான நண்பர்

"நீங்க எதை செய்தாலும் இப்படி சொல்லிக்கொண்டிருங்கோ"
நான் "உண்மையில் உதவி தேவைப்படுவது வன்னிக்குள் உள்ளவர்களுக்கே, வெளியில் உள்ளவர்களுக்கு இவ்வளவு செலவு செய்கிற இலங்கை அரசுக்கு வசதியில்லையா?"
உடனே அந்த விபரமற்ற மற்ற நண்பர் " வவுனியா ஆஸ்பத்திரியில் பனடோல் இல்லையாம்" என்றார்

எனக்கு சிரிப்பதோ அழுவதோ என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இவருக்கு அவற்றை பிறந்த கிராமம் மற்றும் வவுனியா கொழும்பு இதைத்தவிர பிற இடம் எங்கு வரைபடத்தில் இருக்கென்றுகூட தெரியாது. தமிழர் போராட்டம் எதற்காக என்றுகூட தெரியாது. ஆனால் இத்தனைக்கும் இவர் நாட்டைவிட்டு வெளியில்வந்து ஒரு வருடம்கூட இல்லை. எங்கதான் இருந்தாரோ தெரியாது. இவருக்கு நடந்ததென்னவென்றால் இவருடைய உறவினர் சிலர் அங்கு வவுனியாவில் இருக்கிறார்கள் போல அவே அங்கு எங்கோ சென்ற போதே அல்லது ரோட்டில கதைச்சதை இந்த புண்ணியவானிடம் சொல்லியிருக்கிறார்கள் அதை இவர் எங்க கொண்டுவந்து பாவிச்சார் என்று பாருங்கள். சரி அவரைப்பற்றிக்கதைப்பதில் பிரயோசனமில்லை. விடுவம்

அவற்றை பதிலுக்கு நான் "சரி அரசால்தான் முடியவில்லையென்றால் வேற எத்தனை நிறுவனமிருக்கு உதவ" என்றேன்

உடனே அந்த விபரமானவர் "அப்பிடியென்றால் அந்த சனத்தை விடவேண்டியது தானே" என்றார்

எனக்கு பத்திக்கொண்டுவந்தது. அதில் மேலதிகமாக அவருடன் கதைவளர்க்க விரும்பவில்லை வீணா கதைப்பதால் பிரயோசனமில்லை என்பதால்.

இவரென்ன விளங்காத மாதிரி உள்ளரோ இல்லை தான் சொல்லும்கருத்துதான் சரியென்று சொல்வதற்காக சொல்கிறாரோ என்று விளங்கவில்லை. அவருடைய விபரமறியும் திறனைப்பார்த்தால் விளங்காமலிருக்க வாய்ப்பில்லை.

அரசு சொல்வதை நம்புகின்ற அளவுக்கு 1% கூட தமிழ் ஊடகங்கள் சொல்வதை நம்புகிறார்களில்லையே. ஒரு வெளிநாட்டவன் என்றால் கூட பரவாயில்லை அந்த மக்களுடன் வாழ்ந்த ஒருவன் எப்படி நம்பமறுக்கிறான். அந்த மக்களில் எத்தனை பேர் வெளியில் வர விரும்பாமல் இருக்கிறார்கள் என்று இவர்கள் என்ன அறியாதத எத்தனை பேர் விடுதலைக்காக உழைத்தவர்கள் உள்ளார்கள் இந்த மக்களுக்கு என்ன பதில் இவர் போன்றவர்கள் வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் பதிலில்லை சும்மா எழுந்தமானத்துக்கு கதைக்கிறார்கள். என்ன இந்த மக்கள் பாவம் செய்தவர்கள் என்று இவர்கள் கருதுகிறார்களா? அல்லது போராளிகளின் தாய் தந்தை குடும்பம் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதுகிறார்களா? என்னதான் கருதுகிறார்கள் அதுக்குகூட இவர்களிடம் விளக்கமில்லை. இந்த நண்பரைப்போல பலர் எம்மத்தியில் இருக்கிறார்கள் எம் சகோதரராக நண்பராக உறவினராக தயவுசெய்து மாற்றுங்கள் உங்களை………உங்கள் மனச்சாட்சியை தொட்டு ஒருமுறை யோசியிங்கள்.

இப்படியானவர்கள உடனே கேட்பார்கள் எங்களை பார்த்து "நீ இவ்வளவு கதைக்கிறியே போய் போராடவேண்டியதுதானே" என்று. உண்மைதான் நாங்கள் போரடவில்லைதான் இந்த விடுதலைக்காக risk எடுத்து எதுவும் செய்துவிடவில்லைதான் உண்மையை சொல்லப்போனால் எமக்கும் மனம் உறுத்திக்கொண்டேதான் இருக்கிற்து எதுவுமே செய்யவில்லையே என்று ஆனாலு வாழும் ஆசையை விடமுடியவில்லையே…..அம்மா அப்பா சகோதரரை பிரியமுடியவில்லையே……..இதுவே எனக்குள் பலவாறான போரட்டங்களை நடத்துவதுண்டு…….நான் செய்வது பிழையென்றுகூட தெரிகிறது. இருந்தும் அந்த பிழையை விடுகிறேன். அதற்காக நான் செய்யும்பிழையை சரிப்படுத்த மனச்சாட்சிப்படிதான் நடந்துகொள்கிறேன் என பொய்மையாய் எனக்குள் திருப்தியை ஏற்படுத்துவதற்காக போராடுகின்ற உத்தமர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதா? எம்மால் முடியாது என்பதை அவர்கள் செய்யும்போது உண்மையில் அவர்களின் தியாகத்தின் அதிஉன்னதம் உங்களுக்கு புரியவில்லையா? மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள் அவர்கள் எத்தனை மகத்தான மனிதர்கள் என்று. அவர்களென்ன தன் குடும்பம் வாழவேண்டுமென்று மட்டுமா போராடுகிறார்கள். ஒரு முறையே வாழக்கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை எதற்காக தூக்கி எறிந்துவிட்டு செல்கிறார்கள்? அவர்களுக்கு உங்களைப்போல அல்லது எங்களைப்போல வாழ ஆசையில்லையா? உயிரோடிருக்க விருப்பமில்லையா? ஒரு முறை சிந்தித்துபார்த்தீர்கள் என்றால் புரியும். தயவுசெய்து அவர்களின் தியாகத்திற்கு மதிப்பு கொடுங்கள்.

எனது இந்த இரு நண்பர்களின் வடிவில் ஒரு மக்கள் சமூகத்தைதான் பார்க்கிறேன். தயவுசெய்து இப்படி இருக்காதீர்கள் மாறுங்கள்………..