Thursday, April 9, 2009

இந்திய அரசே உனக்கு நாம் என்ன செய்தோம்?

நச்சுக்குண்டேவி எம்மினத்தை கொல்லுமளவுக்கு உனக்கு எம்மினம் என்ன கொடுமை செய்துவிட்டது? இப்படிக்கேட்டால் உடனே சொல்லுகிறாய் உனது பிரதமரைக்கொன்ற இனமென்று. உனக்கு கூட சரியாக உறுதியாக தெரியாதே அதை செய்தது யாரென்று……அப்படியிருக்க நீ ஒரு இனத்தை அழிக்க துணிந்துவிட்டாயே. காலப்போக்கில அதை செய்தது வேறொருவரென தெரியவந்தால் எப்படி அந்நிலையில் நியாயம் வழங்கப்போறாய். சரி நீ சொல்வது போல் அது யாரோவொரு ஈழத்தமிழனால் செய்யப்பட்டால் அதற்கு முழு இனத்தையும் பழிவாங்கிறாயே இதுவென்ன நியாயம். அதுவும் இலங்கை அரசால் ஏற்கனவே கொல்ல முயற்சிக்கப்பட்ட ஒருவரே பின்னர் கொல்லப்பட்டிருக்கிறார். அவ்விலங்கை அரசுடன் மட்டும் கூடிக்குலாவி தமிழினத்தை நச்சுக்குண்டேவி கொல்கிறாயே அவ்வளவு கேவலமானவனா தமிழன்.

உனக்கு ஒன்றுதெரியுமா? ஒவ்வொரு சிங்களவன் மனதில் நீ இருக்கிறாயா என்று ஆராய்ந்து பார்த்ததுண்டா? நீ எங்க அதுகளை ஆராய போகிறாய் உன் சுயநலத்திற்காக ஒட்டுமொத்த இந்திய மக்களை அடகுவைத்து நிற்கும் அதிகாரவர்க்கமான நீயும் ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் அடகுவைத்து நிற்கும் அதிகாரவர்க்கமான அவனும்தானே கதைத்து முடிவெடுக்கிறாய். பிறகு எப்படி கீழ் மட்ட மக்களின் மனம் உனக்கு புரியும். ஆனால் எங்களுக்கு தெரியும் ஏனெனறால் நாங்க அவன்கூட இருந்துருக்கிறோம். அடிப்படையில் நீ அவன் மனதில் இல்லை எப்படியென்று கேட்கிறியா? இதற்கு ஒரு சின்ன உதாரணமே போதும்.

ஒரு கிரிக்கட் போட்டி நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ. இதில தமிழர்கள் சிங்களவர்கூட ஒன்றாய் இருந்து பார்க்கிறார்கள். அதில இந்தியா வெற்றிகளை குவிக்கும்போது தமிழருக்கு எதோவொரு உணர்வு அதற்காக கையை தட்டுகிறான். ஆனால் அந்த சிங்களவன் என்ன செய்கிறான் கை தட்டியதற்காக அவனை தாக்குகிறான். இது உண்மையில் நடக்கின்ற ஒன்று. நான் அனுபவதிலும் கண்டதுண்டு. ஆனால் இன்று என்ன அதே சிங்களவன் உன்னுடைய உதவியுடன் உனக்காக தாக்குப்பட்ட தமிழனை அழிக்கிறான்.

இது ஒரு சின்ன உதாரணம்தான், வாழ்க்கையில் நடக்கும் பல பல சம்பவங்களை பார்க்கும்போது ஒரு தமிழனின் அடிப்படை மனதும் ஒரு சிங்களவனின் அடிப்படை மனதும் தெரியும். ஏன் என்று கேட்டால் தெரியாது. இந்தியா தமிழனுக்காக என்ன செய்துவிட்டான் அதுவும் ஒன்றுமில்லை ஆனாலு தமிழன் உன்னை நேசிக்கிறான் உன்னை பின்பற்றுகிறான் ஆனால் நீயோ அவனை நச்சுக்குண்டேவிக் கொல்கிறாய்.

ஏன் நான் எனது மனநிலையையே சொல்லுகிறேன். இதுதான் பெரும்பாலான தமிழரின் மனநிலையாகவுமிருக்கும். கார்கில் யுத்தம் வந்தபோது பாகிஸ்தான் மீது ஆத்திரம் இந்தியா வெல்லவேண்டும் என்ற பிரார்த்தனை. குஜராத் பூகம்பம் வந்த போது ஏதோ எங்கள் நாட்டு மக்களுக்கு வந்தமாதிரி உணர்வு துக்கம். தூரதர்ஷன் நிகழ்ச்சி பார்க்கும்போது ஏதோ எம் தேசிய தொலைக்காட்சி பார்ப்பது போலவே ஒரு உணர்வு. இந்திய தேசிய நாளில் ஒரு உத்வேகம் தேசிய கீதத்தைக்கேட்கும்போது ஒரு இனம்புரியா உணர்வு கொடியேற்றும்போது ஒரு மரியாதை இத்தனைக்கும் இலங்கையின் தேசிய நாளையோ, கீதத்தையோ அல்லது கொடியையோ ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. இத்தனை உணர்வும் எதனால் வந்ததென்று எனக்கே தெரியவில்லை. நீ எமக்காக என்ன செய்தாய்? இப்படி உன் மீது பாசம் வைத்த தமிழரை நச்சுக்குண்டேவி அழிக்கிறாய்.

ஏன் இந்த வெறி? உன் வல்லாதிக்க ஆசைக்கு வெறிக்கு தமிழன்தான் கிடைத்தானா உனக்கு? தமிழனை கொன்றால் கேட்க எவனிமில்லை என்ற துணிச்சலில் அவனுடை மன உணர்வை பார்க்க மறந்திட்டாய். உன் ஆதிக்க வெறி உன் கண்ணை மறைத்துவிட்டது. இந்திய வல்லாதிக்கமே ஒன்றை மட்டும் சொல்லுகிறேன் அப்பவிருந்த உணர்வு இப்ப எம்மனதில் இல்லை உன்னை ஒரு துரோகியாகவே எண்ணத்தோன்றுகிறது. இதற்காக நீ நிச்சயம் வருந்துவாய் ஒருநாள். இந்த உலகத்தில் உனக்கொரு உற்ற நண்பனின்றி வருந்துவாய்.

0 மறுமொழிகள்: